விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் தமிழகம், கர்நாடகம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
இந்த இரு அணிகளும், பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கர்நாடக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமன்தீப் காரே 78 ரன்கள் எடுத்தார். கர்நாடகம் சார்பில் அதிகபட்சமாக வி.கௌசிக் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து, விளையாடிய கர்நாடகம் 40 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழகம் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டதால், 40 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டன.
இதன்படி, முதலில் விளையாடிய கேப்டன் பார்திவ் படேல் தலைமையிலான குஜராத் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 40 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
ஷாருக் கான் 56 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 47 ரன்களும் எடுத்தனர். அபினவ் முகுந்த் 32 ரன்கள் எடுத்தார். இறுதி ஆட்டம், பெங்களூரு சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.