வியட்னாம் ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் செளரவ் வர்மா தகுதி பெற்றுள்ளார்.
ஹோசிமின்சிட்டி நகரில் நடைபெற்று வரும் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய சாம்பியன் செளரவ் வர்மா 22-20, 21-15 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் மினோரு கோகாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதிச் சுற்றில் அவர் சீனாவின் சன் பெய் ஸியாங்கை எதிர்கொள்கிறார்.
லக்ஷயா சென் அபாரம்: லியுவென் நகரில் நடைபெற்று வரும் பெல்ஜிய சர்வதேச சேலஞ்ச் போட்டியில் இந்திய இளம் வீரர் லக்ஷய சென் அரையிறுதியில் 21-18, 21-11 என்ற கேம் கணக்கில் டென்மார்க்கின் கிம் புருனை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். ஆசிய ஜூனியர் சாம்பியனான லக்ஷயா இறுதிச் சுற்றில் டென்மார்க்கின் விக்டர் வென்ட்செனை எதிர்கொள்கிறார்.