உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவிகுமார் தாஹியா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மங்கோலியா வீரர் துல்கா துமுர் ஒச்சிரை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார் பஜ்ரங் புனியா. இதற்கு முன்பு 2013இல் வெண்கலமும், கடந்த ஆண்டில் வெள்ளியும் வென்றார்.
தான் பங்கேற்ற முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ரவிகுமார் தாஹியா.
ஈரான் வீரர் ரெஸா அட்ரி நகர்ச்சியை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார் தாஹியா. இவர் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார்.
கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி அடைந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அவர் உலக சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டார்.
நுர்-சுல்தான் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 74 கிலோ எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் அஸர்பைஜான் வீரர் கத்ஷிமுரத் கத்ஷியேவிடம் 9-11 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார் சுஷில்.
காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றவரான சுமித் மாலிக் 125 கிலோ எடைப் பிரிவில் முதல் சுற்றில் பங்கேற்று, ஹங்கேரி வீரர் டேனியல் லிகேட்டியிடம் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் சரணடைந்தார். கொரிய வீரர் சுயி சங்ஜாவை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் பர்வீன் ராணா முன்னேறினார். எனினும், உக்ரைன் வீரர் லியுபோமியிரிடம் 0-8 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பர்வீன் ராணா இழந்தார். இவர், 92 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார்.
70 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் இந்திய வீரர் கரன் மோர் 0-7 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் இக்தியோர் நவ்ருúஸாவிடம் தோல்வி அடைந்தார்.