தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 134 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவது டி20 ஆட்டம், ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் கடந்த 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
எனினும், இடைவிடாத மழை காரணமாக டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற 2ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவன் மட்டுமே சிறப்பாக விளையாடி 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. எனவே இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.