உலக தடகளப் போட்டி 100 மீ இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதே எனது தற்போதைய நோக்கம் என ஓட்டப்பந்தய வீராங்கனை தூத்தி சந்த் கூறியுள்ளார்.
இந்தியாவின் அதிவேக வீராங்கனையான அவர் இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வரும் 27-ஆம் தேதி டோஹாவில் உலக தடகளப் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்காக இரவில் பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த 2017 லண்டன் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் போனது.
ஆனால் இந்த முறை டோஹா போட்டியில் கண்டிப்பாக இறுதிக்கு முன்னேறுவதே நோக்கம். இது கடினமாக தென்பட்டாலும், அந்த இலக்கை அடைய போராடுவேன்.
உலக தடகளப் போட்டி குறியீடான 11.24 விநாடிகள் என்பதை தூத்தியால் எட்ட முடியவில்லை. எனினும் டோஹாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 11.26 விநாடிகளில் தூத்தி கடந்தது, உலகப் போட்டியில் அவர் பங்கேற்க உதவியது. டோஹாவில் இரவு நேரம் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அதற்கு என்னை தயார்படுத்தும் வகையில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பயிற்சி பெறுகிறேன் என்றார் அவர்.
உலக பல்கலைக்கழக போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ள தூத்தி சந்த், புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் தனது பயிற்சியாளர் ரமேஷுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உலக தடகளப் போட்டியில் தனது பயிற்சியாளருக்கான செலவுகள் அனைத்தையும் தூத்தியே மேற்கொள்கிறார்.