ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய இது சரியான நேரம் என பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் கூறியுள்ளார்.
ஆடவர் டென்னிஸுக்காக ஏடிபி என்கிற அமைப்பும் மகளிர் டென்னிஸுக்காக டபிள்யூடிஏ என்கிற அமைப்பும் தனித்தனியாக இயங்குகின்றன. இந்நிலையில் இந்த அமைப்புகளின் கூட்டணி பற்றி ஃபெடரர் கூறியதாவது:
ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய இதுவே சரியான நேரம் என நான் மட்டும்தான் எண்ணுகிறேனா? களத்தில் ஆடவரும் மகளிரும் ஒன்றாக இணைந்து போட்டியிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இரு சங்கங்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறுகிறேன்.
இரு விதமான தரவரிசை மதிப்பீடுகள், வெவ்வேறு லோகோக்கள், தனித்தனி இணையத்தளங்கள், தனித்தனி போட்டிகள் என இருப்பது ரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ஃபெடரரின் இந்தக் கோரிக்கைக்கு வீரர்கள், வீராங்கனைகள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.