கடந்த 25 வருடங்களில் இத்தனை நாள்கள் வீட்டில் இருந்ததில்லை எனப் பிரபல வீரர் ஃபெடரர் கூறியுள்ளார்.
ஆடவர் டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம்களுடன் முதலிடத்தில் உள்ளார் 38 வயது ஃபெடரர். இவருடைய போட்டியாளர்களான நடால் (19), ஜோகோவிச் (17) ஆகிய இருவரும் ஃபெடரரின் சாதனையைத் தொட முயன்று வருகிறார்கள். இந்த வருட ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் ஃபெடரர் தோல்வியடைந்தார்.
காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஃபெடரர் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்நிலையில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 25 வருடங்களில் இத்தனை நாள்கள் வீட்டில் இருந்ததில்லை. மலைப் பிரதேசத்தில் உள்ளதால் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம். யாரையும் பார்க்க முடிவதில்லை.
கரோனா விதிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறேன். கடந்த 3 மாதங்களாக என் பெற்றோரைப் பார்க்கவில்லை. குடும்பம், நண்பர்கள், உடல் நலன், மகிழ்ச்சி போன்றவையே வாழ்க்கையில் முக்கியம் என்பதை இந்தக் கடினமான காலக்கட்டம் உணர்த்தியுள்ளது என்றார்.