இந்திய முன்னாள் வீரர் சேதன் செளகான், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்காக 40 டெஸ்டுகள், 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் சேதன் செளகான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2084 ரன்கள் எடுத்துள்ளார். மஹாராஷ்டிரம் மற்றும் தில்லி அணிகளுக்காக ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய சேதன் செளகானுக்கு 1981-ல் அர்ஜூனா விருது கிடைத்துள்ளது. சுனில் கவாஸ்கரும் செளகானும் 59 இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக விளையாடி 3000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள். இந்தக் கூட்டணி 10 முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் - கம்பீர் ஆகிய இருவர் மட்டுமே கவாஸ்கர் - செளகானை விடவும் அதிக முறை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்துள்ளார்கள். செளகான், உத்தரப் பிரதேசத்தில் தற்போது மாநில அமைச்சராக உள்ளார்.
72 வயது சேதன் செளகானுக்கு கரோனா வைரஸ் தொற்று கடந்த மாதம் உறுதியானது. இதையடுத்து லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு குருகிராம் பகுதியில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சேதன் செளகான், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இந்நிலையில் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள செளகானுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.