ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, ஆரம்பத்தில் சில ஐபிஎல் ஆட்டங்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மலிங்காவின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் இந்த நேரத்தில் தந்தையுடன் இருக்க மலிங்கா முடிவு செய்துள்ளார். இதனால் தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவில்லை. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப ஆட்டங்களில் மலிங்கா விளையாட மாட்டார் என்று அறியப்படுகிறது.