19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்தாலும், ஜெய்ஸ்வால் மற்றும் பிஷ்னாய் ஆறுதல் அளிக்கும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி முதன்முறையாக கோப்பை வென்றது.
இந்திய அணி தொடரை இழந்தாலும், இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்தியர்களே முதலிடம் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 6 இன்னிங்ஸில் 4 அரைசதம் மற்றும் 1 சதம் உட்பட 400 ரன்கள் குவித்தார். இவரே தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுள் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த இருவரும் இந்திய அணி கோப்பை வெல்ல இறுதி ஆட்டத்திலும் போராடினர். பேட்டிங்கில் அசத்திய ஜெய்ஸ்வால் 88 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் நடுவரிசை பேட்ஸ்மேன்களை மிரட்டிய பிஷ்னாய் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தபோதிலும், மற்ற வீரர்கள் இவர்களுக்கு பெரிதளவு கைகொடுக்கவில்லை. இதுவே ஆட்டத்தின் முடிவில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.