ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தனது தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்து சிட்னியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று ‘பயோ - பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள்ளாக தன்னை இணைத்துக் கொண்டது.
முன்னதாக ஆஸ்திரேலியா வந்தடைந்த இந்திய அணி சிட்னியின் புறநகா் பகுதியில் உள்ள புல்மேன் ஹோட்டலில் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டது. அத்துடன் சிறப்பு அனுமதியின் பேரில் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தது.
பயிற்சியின்போது வீரா்கள் அருகருகே இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவா்கள் ஹோட்டலில் இருந்து மைதானம் சென்றுவரும் பேருந்தில் உரிய இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலம் நிறைவடைந்ததை அடுத்து இந்திய அணி சிட்னியில் உள்ள கான்டினென்டல் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
பயோ - பபுள் வளையத்துக்குள்ளாக வந்துள்ள இந்திய அணியினா் தற்போது ஒருவரை ஒருவா் ஹோட்டலுக்குள்ளேயே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனா்.