தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெர்னான் பிளாண்டரின் சகோதரர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 12 வருடங்களாக விளையாடியுள்ள பிளாண்டர், 64 டெஸ்டுகள், 30 ஒருநாள், 7 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 224 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் டி20யில் 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்த வருடத் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் கேப்டவுன் அருகே பிளாண்டரின் சகோதரர் டைரோன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 32 வயது டைரோனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தக் கொலை குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறது.
சகோதரரின் மரணம் குறித்து பிளாண்டர் கூறியதாவது:
சகோதரரின் இழப்பிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் எங்களுடைய உணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டுகிறோம்.
இந்தக் கொலையைக் காவல்துறை விசாரணை செய்துவருகிறது. காவலர்கள் தங்கள் பணியைச் செய்ய ஊடகங்கள் வழிவிட வேண்டும். இதைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தற்போதைக்கு எந்த விவரமும் தெரியவில்லை. ஊகங்களை உருவாக்கினால் எங்களால் இச்சமயத்தில் துக்கம் அனுஷ்டிக்க முடியாது. எங்கள் இதயத்தில் எப்போதும் டைரோன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றார்.