திட்டமிட்டபடி பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த முடியும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொவைட் 19 பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு சா்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளே ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் நவம்பா் மாதம் 2 முதல் 21-ஆம் தேதி வரை இந்தியாவில் மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஏஐஎப்எப் தீவிரமாக செய்து வருகிறது. போட்டி அமைப்புக் குழு 7 மாதங்களாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கூட்டமைப்பு பொதுச் செயலாளா் குஷால் தாஸ் கூறியதாவது:
போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். நவி மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், புவனேசுவரம், குவாஹாட்டியில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. போட்டிக்கு இன்னும் சிறிது காலமே உள்ளது. இதற்கான ஐரோப்பிய, ஆப்பிரிக்க தகுதிச் சுற்று இன்னும் நடக்கவில்லை. கொவைட் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து பிஃபா ஆலோசித்து வருகிறது. 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளன என்றாா் தாஸ்.