கரோனா அச்சுறுத்தல் காரணமாக தோழியுடனான திருமணத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை ஒத்திவைத்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 55,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனாவால் தென் ஆப்பிரிக்காவில் 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். தற்போது தென் ஆப்பிரிக்காவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை லிஸல் லீ, தோழியுடனான திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். ஏப்ரல் 10 அன்று லிஸல் லீக்கும் நான்கு வருடங்களாகக் காதலித்து வரும் அவருடைய தோழி தன்ஜா குரோனியேவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 வயது லிஸல் லீ, தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 82 ஒருநாள், 74 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் ஓரினத் திருமணம் 2006-ல் அங்கீகரிக்கப்பட்டது. தன்ஜா குரோனியேவுடனான காதல் குறித்து ஒரு பேட்டியில் லிஸல் லீ கூறியதாவது: எங்களுக்கு இந்த உறவு சாதாரணம். ஆனால் வெளியே செல்லும்போது கைகளைக் கோத்துக்கொண்டு செல்லமாட்டோம். மக்கள் எங்களைப் பற்றி ஏதாவது நினைப்பார்கள். எங்கள் காதல் குறித்து பெற்றோர்களிடம் சொல்வது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.