தற்போதைய சூழலில் காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார் என சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் பற்றி ஒரு பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
ரசிகர்களின் உடல்நலன் மிகவும் முக்கியம். சூழல் ஏற்பட்டால், காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார். ரசிகர்களின் ஆதரவு விளையாடும்போது கிடைக்காது தான். ஆனால் காலி மைதானத்தில் ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தபட்சம் அவர்கள் தொலைக்காட்சியிலாவது கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பார்கள்.
வீரர்களின் நலனில் நாம் அக்கறை செலுத்தவேண்டும். கிரிக்கெட் மைதானம், வீரர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்தும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். நிலைமை சரியான பிறகுதான் ஐபிஎல் போட்டி நடத்தப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.