கடந்த 20 வருடங்களாக தான் கோபப்பட்டதேயில்லை என தோனி என்னிடம் தெரிவித்தார் என்று சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
இன்ஸ்டகிராம் விடியோ வழியாக குல்தீப் யாதவ் தெரிவித்ததாவது:
2017-ல் இந்தூரில் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டம் அது. குசால் பெரேரா கவர் பகுதியில் ஒரு பவுண்டரி அடித்தார். உடனே விக்கெட் கீப்பராக இருந்த தோனி, ஃபீல்டிங்கை உடனே மாற்று எனக் கத்தினார். நான் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. அடுத்தப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தார் பெரேரா.
கடுப்பான தோனி என்னிடம் வந்து, நான் என்ன முட்டாளா? நான் 300 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். என் பேச்சைக் கேட்க மறுக்கிறாய் என்றார். நான் பயந்துவிட்டேன்.
ஆட்டம் முடிந்த பிறகு அணியினர் செல்லும் பேருந்தில் அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற சூழலில் கோபப்படுவீர்களா என்று கேட்டேன். என்னை அவர் ஆறுதல்படுத்தினார். என்னிடமிருந்து சிறந்த பந்துவீச்சைக் கொண்டுவருவதற்காக அப்படிக் கத்தியதாகக் கூறினார். கடந்த 20 வருடங்களாக நான் கோபப்பட்டதேயில்லை எனப் பதில் அளித்தார் என்று தோனியுடனான அனுபவங்களை குல்தீப் யாதவ் பகிர்ந்துகொண்டார்.