இந்திய அணிக்காக தோனி மீண்டும் விளையாட மாட்டார் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ரோஹித் சர்மாவுடனான உரையாடலில் தோனி பற்றி ஹர்பஜன் சிங் கூறியதாவது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபிஎல் பயிற்சி முகாமில் பங்கேற்றபோது பலரும் என்னிடம் தோனி மீண்டும் விளையாடுவாரா, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா எனக் கேட்டார்கள். எனக்குத் தெரியாது. அதை அவர் தான் முடிவு எடுக்கவேண்டும் என்றேன்.
ஐபிஎல்-லில் அவர் 100% விளையாடுவார். ஆனால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என அவர் விரும்புகிறாரா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். எனக்குத் தெரிந்து அவருக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இந்திய அணிக்காக அவர் போதுமானவரை விளையாடிவிட்டார். அவரைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை, மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என அவர் விரும்பவில்லை. இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய உலகக் கோப்பை ஆட்டமே அவருடைய கடைசி ஆட்டம் என அவர் முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. பலரும் என்னிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்கள் என்றார்.