இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று ஐபிஎல் தொடங்குகிறது. இறுதிச்சுற்று நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நடைபெறுகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து சிஎஸ்கே தரப்பு கூறியுள்ளதாவது:
சென்னையிலிருந்து தோனி உள்பட அனைத்து வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வோம். சென்னையில் கூடுவதற்கு முன்பு அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடுத்த 48 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் செய்வார்கள். வழிகாட்டு நெறிமுகளை பிசிசிஐ வெளியிட்ட பிறகு பயிற்சி முகாம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுப்போம் என்று கூறப்பட்டுள்ளது.