சொந்த காரணங்களுக்காக எல்பிஎல் போட்டியிலிருந்து தற்காலிகமாக விலகி பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளதாக சாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.
எல்பிஎல் (Lanka Premier League) எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி, நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறுகிறது. கண்டி டஸ்கர்ஸ், டம்புல்லா வைகிங், கேலே கிளாடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இந்நிலையில் கேலே கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனும் பாகிஸ்தான் முன்னாள் வீரருமான சாஹித் அப்ரிடி, சொந்த காரணங்களுக்காக பாகிஸ்தானுக்குத் திரும்புவதாகக் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் விரைவில் திரும்பி மீண்டும் எல்பிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கேலே கிளாடியேட்டர்ஸ் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து அப்ரிடி மீண்டும் இலங்கைக்குத் திரும்பினால் வழக்கமான முறையில் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட மாட்டார் எனத் தெரிகிறது. கரோனா வைரஸ் தொற்றால் அப்ரிடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதனால் சில நாள்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார் என அறியப்படுகிறது. கடந்த நவம்பர் 24 அன்று இலங்கைக்கு வந்த அப்ரிடி, நவம்பர் 27 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.