மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி உயிரிழந்தாா். ஜேட்லி, தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
ஃபெரோஸ் ஷா கோட்லா என்கிற பெயர் கொண்ட தில்லி கிரிக்கெட் மைதானத்தின் பெயர், ஜேட்லியின் நினைவாக அவருடைய மறைவுக்குப் பிறகு அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் என மாற்றப்பட்டது.
அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லி, தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். தில்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜேட்லிக்குச் சிலை வைக்கப்படும் எனச் சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. தில்லி கிரிக்கெட் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜேட்லி மைதான கேலரிக்கு வைக்கப்பட்டுள்ள தனது பெயரை நீக்க வேண்டும் என்றும், தில்லி கிரிக்கெட் சங்கத்தில் உள்ள தனது உறுப்பினர் தகுதியைக் கைவிடுவதாகவும் தில்லி கிரிக்கெட் சங்கத்துக்கு பேடி கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேலரின் ஒன்றுக்கு பேடியின் பெயர் மூன்று வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. 1970களில் தில்லி அணிக்குத் தலைமை தாங்கி இரு ரஞ்சி கோப்பைகளை பேடி வென்றுள்ளார்.