பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பங்காற்றியதற்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டேரன் சாமிக்குக் கெளரவக் குடியுரிமை வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இஸ்லாமாபாத்தில் மார்ச் 23 அன்று நடைபெறவுள்ள விழாவில் பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷா-இ பாகிஸ்தான் விருதும் சாமிக்கு வழங்கப்படவுள்ளது. இதே விழாவில் கெளரவக் குடியுரிமையை பாகிஸ்தான் அதிபர் அர்ஃப் அல்வி வழங்கவுள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்எல் டி20 போட்டி தொடங்கிய 2016 முதல் பெஷாவர் ஸல்மி அணிக்காக விளையாடி வருகிறார் மே.இ. தீவுகள் முன்னாள் கேப்டன் டேரன் சாமி. பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்காக டேரன் சாமி ஆற்றிய பங்குக்காக அவருக்குக் கெளரவக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்று பெஷாவர் ஸல்மி அணி விடுவித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். 2017 முதல் பெஷாவர் ஸல்மி அணியின் கேப்டனாக சாமி உள்ளார்.
பிஎஸ்எல் டி20 போட்டியின் இறுதிச்சுற்று பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவித்தபோது அதற்கு முதலில் சம்மதம் தெரிவித்தவர் டேரன் சாமி. 2017-ல் ஐசிசி உலக லெவன் அணி, பாகிஸ்தானில் மூன்று டி20 ஆட்டங்கள் ஆடியபோதும் அந்த அணியில் சாமி இடம்பெற்றிருந்தார். மற்ற வீரர்களும் இந்த ஆட்டத்தில் பங்குபெறவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் தற்போது பாகிஸ்தானின் கெளரவக் குடியுரிமையை அவர் பெறவுள்ளார்.