நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மந்தனா 11 ரன்களில் ஆட்டமிழக்க, வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 16 வயது ஷஃபாலி. அன்னா பீட்டர்சன் வீசிய 5-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். 6 ஓவர்களில் இந்திய அணி 49/1 ரன்கள் எடுத்தது. ஆரம்பம் நன்றாக அமைந்தாலும் நடு ஓவர்களில் இந்திய அணி மோசமாக விளையாடியது. தானியா பாட்டியா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் ரன்கள் எடுக்கும் வேகமும் குறைந்தது.
ரோட்ரிகஸ் 10 ரன்களிலும் கெளர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷஃபாலி. வேதா கிருஷ்ணமூர்த்தி 6 ரன்களிலும் தீப்தி சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். ராதா யாதவ் 14 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ரன் அவுட் மூலம் வெளியேறினார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.