மகளிர் டி20 உலகக் கோப்பை: ராதா யாதவ், ஷஃபாலியின் அபாரப் பங்களிப்பால் இலங்கையை எளிதாக வென்ற இந்திய அணி

4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராதா யாதவ், ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார். 
மகளிர் டி20 உலகக் கோப்பை: ராதா யாதவ், ஷஃபாலியின் அபாரப் பங்களிப்பால் இலங்கையை எளிதாக வென்ற இந்திய அணி

மகளிர் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ராதா யாதவ், ஷஃபாலியின் அபாரப் பங்களிப்பால் இலங்கையை எளிதாக வென்றது இந்திய அணி.

மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான ஜெயாங்கனியைத் தவிர இதர வீராங்கனைகள் ரன் எடுக்கத் தடுமாறினார்கள். ஜெயாங்கினி 33 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களால் சுலபமாக விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. 80 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. பின்வரிசை வீராங்கனை தில்ஹாரி 25 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. 19 வயது ராதா யாதவ் 4 விக்கெட்டுகளும் ராஜேஸ்வரி கெயாக்வாட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்திலும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

எண்ணியது போலவே இலக்கை மிக எளிதாக அடைந்தது இந்திய அணி. இதர வீராங்னைகள் அவருக்கு நல்ல துணையாக அமைய, 34 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார் புதிய நட்சத்திரம் ஷஃபாலி வர்மா. மந்தனா 17, கேப்டன் கெளர் 15 ரன்கள் எடுத்தார்கள். ரோட்ரிகஸ், தீப்தி சர்மா தலா 15 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்திய அணி, 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து மிக எளிதாக வென்றது. இதன்மூலம் லீக் ஆட்டங்களில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்துள்ளது இந்திய அணி. 

4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராதா யாதவ், ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com