ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் வரிசையில் ராகுல் டிராவிட்டைப் பின்னுக்குத்தள்ள வாய்ப்பு உள்ளது.
ராகுல் டிராவிட் 340 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 124 கேட்ச்களைப் பிடித்துள்ளார். விராட் கோலி 242 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 124 கேட்ச்களைப் பிடித்து டிராவிட் சாதனையை சமன் செய்துள்ளார். இதன்மூலம், நாளைய ஆட்டத்தில் விராட் கோலி, ராகுல் டிராவிட்டைப் பின்னுக்குத்தள்ள வாய்ப்பு உள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதின் 334 ஒருநாள் ஆட்டங்களில் 154 கேட்ச்களைப் பிடித்து முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 463 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 140 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.
இந்த வரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் 300-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி சாதித்ததை விராட் கோலி 250 ஆட்டங்களுக்கும் குறைவான ஆட்டங்களிலேயே விளையாடி சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.