2019 உலகக் கோப்பைப் போட்டியின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்த 87 வயது சாரு லதா படேல், இந்திய அணியை மிகவும் உற்சாகப்படுத்தி கவனம் ஈர்த்தார்.
இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்திய பிறகு, சாரு லதா பாட்டியின் அருகில் சென்று சிறிது நேரம் உரையாடினார் விராட் கோலி. பிறகு தன்னிடம் பேசிய ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு முத்தங்கள் அளித்து உலகக் கோப்பையை வெல்ல ஆசி வழங்கினார் பாட்டி. இதன் புகைப்படங்களும் விடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவின.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ரசிகையாக அனைவரையும் கவர்ந்த சாரு லதா பாட்டி நேற்று காலமானார். அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சாரு லதாவின் மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.