ஒருநாள் தொடர்: ரிஷப் பந்துக்கு மாற்றாக புதிய விக்கெட் கீப்பர் தேர்வு!

எதனால் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்றவர்களைத் தற்போது தேர்வு செய்யவில்லை என்கிற கேள்வி எழும்
ஒருநாள் தொடர்: ரிஷப் பந்துக்கு மாற்றாக புதிய விக்கெட் கீப்பர் தேர்வு!

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. வீரா் பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சா் பந்து ஹெல்மெட்டில் பட்டுக் காயமடைந்தாா் இந்திய விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த். அதில் ஆட்டமிழந்த அவர், பிறகு மீண்டும் விளையாட வரவில்லை. ஆஸி. அணி பேட்டிங் செய்தபோது லோகேஷ் ராகுலே விக்கெட் கீப்பராகச் செயல்பட்டாா்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப் பந்த்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் அவா் ஆடமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராஜ்கோட் ஒருநாள் ஆட்டத்திலிருந்து பந்த் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார்.

இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பராக ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ். பரத் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ள ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியுடன் பரத் இணைந்துகொள்வார். ராகுலுக்குக் காயம் ஏற்பட்டால், இந்திய அணி பரத்தைத் தேர்வு செய்துகொள்ளும். 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் விளையாடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

எதனால் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்றவர்களைத் தற்போது தேர்வு செய்யவில்லை என்கிற கேள்வி எழும். இருவரும் இந்திய ஏ அணியில் இடம்பெற்று தற்போது நியூஸிலாந்தில் உள்ளார்கள். இதனால் பரத்துக்குத் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com