மீண்டும் ராகுல், ஷ்ரேயஸ் அபாரம்: 2-வது டி20-யிலும் இந்தியா வெற்றி

மீண்டும் ராகுல், ஷ்ரேயஸ் அபாரம்: 2-வது டி20-யிலும் இந்தியா வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 133 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடித்தாலும், அதே ஓவரில் அவர் ஆட்டமும் இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சௌத்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 39 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, ராகுலுடன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்தார். இருவரும் சூழலுக்கு ஏற்ப விக்கெட்டைப் பாதுகாத்து பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். மோசமான பந்துகளை மட்டுமே குறிவைத்த இவர்கள் படிப்படியாக ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தனர். கேஎல் ராகுல் இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டுகள் இருந்த நிலையில், இருவரும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்தனர். இதனால், இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 6 ரன்களுக்கும் குறைவான நிலையை அடைந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடிக்க முயன்ற ஷ்ரேயஸ் சோதி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 67 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இதன்பிறகு, சௌத்தி வீசிய 18-வது ஓவரில் ஷிவம் துபே ஒரு சிக்ஸர் அடிக்க இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது. 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 50 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் விளையாடும் 3-வது டி20 ஆட்டம் வரும் புதன்கிழமை ஹாமில்டனில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com