பாகிஸ்தானில் டி20 ஆசிய கோப்பைப் போட்டி நடைபெற்றால், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வருட செப்டம்பரில் டி20 ஆசிய கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவும் இப்போட்டியில் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பைப் போட்டி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
ஆசிய கோப்பைப் போட்டி எங்கு நடைபெறும் என்பதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் இதர ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறவும் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிய கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி அங்குச் செல்லாது. இந்தியாவின் பங்கேற்பு இல்லாமல் ஆசிய கோப்பை நடைபெறவேண்டும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம். இந்தியா அப்போட்டியில் பங்கேற்கவேண்டும் என்றால் பாகிஸ்தானில் அப்போட்டி நடைபெறக்கூடாது என்று கூறியுள்ளார்.
2018-ல் ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றது. அதேபோல இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பைப் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.