பனாமா நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்பவான் ராபர்டோ டுரன் (69) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளார்.
16 வயது முதல் 50 வயது வரை குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்ட ராபர்டோ டுரன், 119 ஆட்டங்களில் பங்கேற்று 103-ல் வென்று 16-ல் தோல்வியடைந்துள்ளார். 70 முறை நாக் அவுட் மூலம் வென்றுள்ளார். ஆறு முறை உலக சாம்பியன் ஆகியுள்ளார்.
சமீபத்தில் ராபர்டோ டுரனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதுபற்றி அவருடைய மகன் ராபின் தெரிவித்ததாவது: என் தந்தையின் பரிசோதனை முடிவு வந்துள்ளது. கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். நல்லவேளையாக பெரிதளவில் கரோனா அறிகுறிகள் எதுவும் தந்தைக்கு இல்லை. (மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும்) அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் தற்போது இல்லை. வெண்டிலேட்டர் உதவியும் தேவைப்படவில்லை. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றார்.
இந்நிலையில் ராபர்டோ டுரன் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளார்.
தன்னுடைய நிலை பற்றி டுரன் கூறியதாவது: கரோனா வைரஸுடன் போராடிவிட்டு கடவுளின் கருணையால் வீடு திரும்பியுள்ளேன். இது ஒரு உலக சாம்பியன்ஷிப் மோதல். ஓர் அணியாக மருத்துவக்குழுவின் உதவியுடன் நான் வென்றுள்ளேன். கரோனாவுக்கு ஜாம்பவான்கள், உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள், சமூக அந்தஸ்து, இனம், மதம் எதுவும் தெரியாது. என்னைப் போல கரோனா வைரஸுடன் போராடிய அனைவருக்கும் மருத்துவக் குழு உதவியது. நான் முன்னாள் உலக சாம்பியனாக இருக்கலாம். ஆனால், நீங்கள் தான் வாழ்க்கையின் உண்மையான சாம்பியன்கள் என்றார்.