கரோனா பரிசோதனையில் மீண்டும் நெகடிவ்: இங்கிலாந்து செல்லவுள்ள ஆறு பாகிஸ்தான் வீரர்கள்

ஆறு பாகிஸ்தான் வீரர்களுக்கு நடத்தப்பட்ட 2-வது கரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்துள்ளதால்
கரோனா பரிசோதனையில் மீண்டும் நெகடிவ்: இங்கிலாந்து செல்லவுள்ள ஆறு பாகிஸ்தான் வீரர்கள்

ஆறு பாகிஸ்தான் வீரர்களுக்கு நடத்தப்பட்ட 2-வது கரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்துள்ளதால் அந்த ஆறு வீரர்களும் இங்கிலாந்து செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. 29 பேர் கொண்ட இந்த அணியில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதர் அலி தேர்வானார். 

வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதியானது. இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்தது. இதனால் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் அந்த 10 வீரர்களும் இடம்பெறவில்லை. இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 

கடந்த வாரம், 10 வீரர்களுக்கும் கரோனா மறுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கஷிஃப் பட்டி, ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, இம்ரான் கான் ஆகிய நான்கு வீரர்களுக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் உறுதியானது. முகமது ஹபீஸ், ஃபகார் ஸமான், சதாப் கான், முகமது ரிஸ்வான், முகமது ஹஸ்நைன், வஹாப் ரியாஸ் ஆகிய வீரர்களுக்கு நெகடிவ் என முடிவு வந்தது. 

டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட 20 வீரர்கள் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி, கடந்த ஞாயிறு அன்று இங்கிலாந்துக்குச் சென்றது. லாகூரிலிருந்து தனி விமானம் மூலமாக மான்செஸ்டருக்குச் சென்றுள்ளார்கள். 

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன்பிறகு ஜூலை 13 முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள். 

இந்நிலையில் நெகடிவ் முடிவு வந்த ஆறு வீரர்களுக்கும் மறுபடியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மீண்டுமொரு முறை நெகடிவ் என முடிவு வந்துள்ளது. முகமது ஹபீஸ், ஃபகார் ஸமான், சதாப் கான், முகமது ரிஸ்வான், முகமது ஹஸ்நைன், வஹாப் ரியாஸ் ஆகிய ஆறு வீரர்களுக்குக் கடந்த மூன்று நாள்களில் இருமுறை நெகடிவ் என முடிவு வந்துள்ளதால் இவர்கள் அனைவரும் விரைவில் இங்கிலாந்து செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com