கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் வெளியிட்டது. ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை இத்தொடர் நடைபெறுகிறது. அக்டோபர் 4-9 வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் டி20 தொடர் நடைபெறுகிறது. நவம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டமும் ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்கள் நடைபெறுகின்றன. இந்த அட்டவணையில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையிலான டி20 உலகக் கோப்பையும் இடம்பெற்றுள்ளது.
இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
முன்பே அறிவித்தபடி ஆகஸ்ட் 9, 12, 15 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வேறொரு தேதிகளில் இந்தத் தொடர் நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவுடனான தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் ஜிம்பாப்வே அணி இழந்துள்ளது.