காயத்தில் இருந்து திரும்பியுள்ள இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ஹார்திக் பாண்டியா டி20 தொடர் ஒன்றில் 37 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வந்த இந்திய அணியின் பிரதான ஆல்-ரௌண்டர் ஹார்திக் பாண்டியா கடந்த வாரம் மீண்டும் களத்துக்குத் திரும்பினார். டிஒய் பாட்டீல் டி20 கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிலையன்ஸ் 1 அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
இந்த தொடரில், 'சி' பிரிவில் ரிலையன்ஸ் 1 அணிக்கும், சிஏஜி அணிக்கும் இடையிலான ஆட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் ஹார்திக் பாண்டியா தனது வழக்கமான மிரட்டல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்ட்ததில் 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ரிலையன்ஸ் 1 அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் பந்துவீச்சிலும் மிரட்டிய ஹார்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் காரணமாக சிஏஜி 151 ரன்கள் மட்டுமே எடுத்து 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 12-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், காயத்தில் இருந்து திரும்பியுள்ள ஹார்திக் பாண்டியா தன்னுடைய பேட்டிங் மூலம் அணித் தேர்வாளர்களின் கதவைத் தட்டியுள்ளார்.