கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்ததாவது:
ஒரு பிரதமராக இச்சமயத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. தெளிவான விதிமுறைகளும் ஊரடங்கு உத்தரவும்தான் ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவையாகும். இதர நாடுகளின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான உடல்நலன் தான் தற்போதைய முக்கியத் தேவையாகும். பிரதமர் பேசியதிலிருந்து நான் புரிந்துகொள்வது - இது (ஊரடங்கு உத்தரவு) தேவையென்றால் தான் தேவை.
ஒருவர் ஷாப்பிங் மையத்துக்குச் சென்று புதிய சட்டை வாங்கிக்கொள்ள முடியும் என்றால் இங்கு என்ன நடக்கிறது? நிச்சயம் இப்போது ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் பிறப்பித்திருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸால் உலகம் முழுக்க 16,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.