கரோனா நிவாரண நிதி: ரூ. 80 லட்சத்தை நான்கு தரப்பினருக்குப் பிரித்துக் கொடுத்த ரோஹித் சர்மா!
By எழில் | Published On : 31st March 2020 11:51 AM | Last Updated : 31st March 2020 11:51 AM | அ+அ அ- |

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 80 லட்சத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 37,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 80 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார் ரோஹித் சர்மா. ரூ. 45 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும் ரூ. 25 லட்சத்தை மஹாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கும் ஸோமாட்டோ ஃபீடிங் இந்தியா நிறுவனம் மற்றும் தெரு நாய்களின் நலனுக்காகத் தலா ரூ. 5 லட்சத்தையும் வழங்கியுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...