வீரர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க அணியுடன் மனநல ஆலோசகர் எப்போதும் இருக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார்.
எம்ஃபோர் என்கிற அமைப்பு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுடன் உரையாடிய தோனி கூறியதாவது:
நான் பேட்டிங் செய்ய செல்லும்போது முதல் 5, 10 பந்துகளை எதிர்கொள்ளும்போது என்னுடைய இதயத் துடிப்பு எகிறும். இதனால் எனக்கு மன அழுத்தம் உண்டாகும். எனக்குப் பயம் உண்டாகும். எல்லோருக்கும் இப்படித்தான். இதை எதிர்கொள்வது எப்படி?
இது சிறிய பிரச்னை தான். ஆனால் பல சமயங்களில் பயிற்சியாளரிடம் இதைக் கூறத் தயங்குவோம். இதனால் தான் வீரருக்கும் பயிற்சியாளருக்குமான உறவு என்பது மிகவும் முக்கியமானது.
மனநல ஆலோசகர் என்பவர் 10, 15 நாள்களுக்கு மட்டும் அணியுடன் இருக்கக்கூடாது. எனில் அவரால் அனுபவங்களை மட்டுமே கூற முடியும். அணியுடன் அவர் எப்போதும் இருந்தால் ஆட்டம் நடைபெறும்போது எப்போதெல்லாம் வீரர்கள் அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றார்.
எம்ஃபோர் என்கிற அமைப்பை தமிழக முன்னாள் வீரர் எஸ். பத்ரிநாத் தனது நண்பர் சரவண குமாருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். விளையாட்டு வீரர்களின் மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் உதவுவதே இதன் நோக்கமாகும்.