கரோனா தடுப்புப் பணிகளுக்காக அர்ஜெண்டினாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ. 4 கோடியே 10 லட்சத்தை அளித்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 70,700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக அர்ஜெண்டினாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ. 4 கோடியே 10 லட்சத்தை அளித்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த காசா கர்ராஹன் என்கிற அறக்கட்டளைக்கு இந்த நிதியை அளித்துள்ளார். அந்த அமைப்பு, இந்தத் தொகையைக் கொண்டு கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும்.
கடந்த மார்ச் மாதம், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பார்சிலோனா அரசு மருத்துவமனை ஒன்றுக்கு ரூ. 8.27 கோடி நிதியுதவி அளித்தார் மெஸ்ஸி. மெஸ்ஸியின் முன்னாள் மேலாளரும் கரோனா தொடர்புடைய மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ. 8.27 கோடி நிதியுதவி அளித்தார்.