ஹாக்கி முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியருக்கு நேற்று மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வருகிறார் 96 வயது பல்பீர் சிங் சீனியர். கடந்த மே 8 அன்று மொஹலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பல்பீர் சிங்கின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார். அவருடைய நிலைமையை மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள் என்று பல்பீர் சிங்கின் பேரன் கபிர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் பல்பீர் சிங். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது. ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டியில் அதிக கோலடித்தவர் என்கிற சாதனை பல்பீர் வசமே உள்ளது. 1952-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இறுதிச்சுற்றில் இந்திய அணியின் 6-1 வெற்றியில் 5 கோல்கள் அடித்து அசத்தினார் பல்பீர். 1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பீர் தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பீர் சிங்குக்கு அளிக்கப்பட்டது.