கரோனா ஊரடங்கால் தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கைப் பிரிந்து வாழ்கிறார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சோயிப் மாலிக் பாகிஸ்தானின் சியால்கோட்டில் வசிக்க சானியாவும் அவருடைய மகன் இசானும் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.
இரு வருடங்கள் கழித்து கடந்த ஜனவரியிலிருந்து மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார் சானியா மிர்சா. ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் கலந்துகொண்ட சோயிப் மாலிக், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டார்.
இன்ஸ்டகிராம் நேரலை நிகழ்ச்சியொன்றில் சானியா மிர்சா கூறியதாவது:
பாகிஸ்தானும் அவரும் இந்தியாவில் நானும் மாட்டிக்கொண்டு விட்டோம். எங்களுக்கு ஒரு சிறிய குழந்தை இருப்பதால் சமாளிப்பது கடினமாக உள்ளது. என் மகன் அவனுடைய அப்பாவை எப்போது பார்ப்பான் எனத் தெரியவில்லை. நாங்கள் இருவரும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள். யதார்த்தத்தைப் புரிந்துகொள்வோம். சோயிப்பின் தாய்க்கு 65 வயது. அவருக்காக சோயிப், பாகிஸ்தானில் இருந்தாகவேண்டும். வீட்டில் குழந்தை ஒன்று இருப்பதால் என்னையும் அவனையும் வயதான பெற்றோரையும் எப்படிப் பாதுகாப்பது என சில நாள்களுக்கு முன்பு மிகவும் கவலைப்பட்டேன். டென்னிஸைப் பற்றி எண்ணும் நேரமல்ல இது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனையை அளிக்கிறது. உதவி தேவைப்படுவர்களுக்கு என்னால் முடிந்தளவு நிதி திரட்டி உதவி செய்து வருகிறேன். ஆனால் அது போதுமா எனத் தெரியவில்லை. விடியோக்களைப் பார்க்கும்போது குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றார்.