ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இந்திய அணி தயாராக உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஐசிசி அட்டவணைப்படி ஜூலை மாதம் இலங்கையில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கைச் சுற்றுப்பயணம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து பிசிசிஐக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. ஜூலை மாதம் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும் அரசின் வழிகாட்டுதலின்படியே முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:
ஊரடங்குத் தளர்வுகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே பிசிசிஐ முடிவெடுக்கும். வீரர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைகள் எதுவும் இல்லை என்றால் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்ய இந்திய அணி தயாராக உள்ளது என்றார்.