கீப் இட் அப் என்கிற புதிய சவாலைத் தொடங்கி வைத்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்.
கிரிக்கெட் மட்டையின் விளிம்புப் பகுதியில் பந்துகளை விடாமல் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும். முதலில் இதைச் செய்து விடியோவை வெளியிட்ட யுவ்ராஜ் சிங் - சச்சின், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குச் சவால் விடுத்தார்.
ஆடுகளத்தில் பல புயல்களைக் கண்டவர் சச்சின். அவரிடம் இந்த எளிய சவாலைத் தரலாமா?
இதனால் இதை வைத்து ஒரு வேடிக்கை காண்பித்தார் சச்சின். கண்களைக் கருப்புத் துணியால் மூடிக்கொண்டு கிரிக்கெட் மட்டையால் பந்துகளைத் தட்டிக்காண்பித்து ஆச்சர்யத்தை உண்டாக்கினார். ஆனால் அதே விடியோவில் அதன் ரகசியத்தையும் வெளியிட்டார். கருப்புத் துணியாக இருந்தாலும் அதில் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மறு பக்கம் தெளிவாகத் தெரிந்தது. விடியோவின் கடைசியில் இதைச் சொல்லி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார் சச்சின். பிறகு இந்தச் சவாலை அப்படியே யுவ்ராஜுக்கும் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து ரோஹித் சர்மாவும் ரஹானேவும் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு இதன் விடியோக்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.