ஒருநாள் ஆட்டங்களில் இலக்கை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் விராட் கோலிக்கு நிகராக இன்னொரு வீரர் கிடையாது.
இலக்கை விரட்டும்போது இந்திய அணி வெற்றி பெற்ற ஆட்டங்களில் 86 இன்னிங்ஸில் 5388 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. சராசரி - 96.21. இதேபோல சச்சின் டெண்டுல்கர், இலக்கை விரட்டும்போது இந்திய அணி வெற்றி பெற்ற ஆட்டங்களில் 124 இன்னிங்ஸில் 5490 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 55.45. இதனால் இலக்கை விரட்டுவதில் சச்சினை விடவும் கோலி தான் மிகச்சிறந்த வீரர் எனப் பலரும் புகழ்ந்துள்ளார்கள்.
இலக்கை விரட்டும்போது தன்னுடைய மனநிலை எப்படியிருக்கும் என்கிற ரகசியத்தை வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டகிராம் உரையாடலில் பகிர்ந்துகொண்டுள்ளார் விராட் கோலி. அவர் கூறியதாவது:
இலக்கை விரட்டும்போது எளிதான மனநிலையில் தான் இருப்பேன். யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் அதன்மூலம் நான் ஊக்கம் கொள்வேன்.
சிறுவயதில் நான் பார்த்த கிரிக்கெட் ஆட்டங்களில், இலக்கை விரட்டும்போது இந்திய அணி தோல்வியடைந்துவிட்டால் நான் இவ்வாறு நினைப்பேன் - நான் மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றியைத் தேடிக் கொடுத்திருப்பேன் என. இலக்கை விரட்டும்போது எதிரணி அதிக ரன்களை எடுத்திருக்கும். எனக்கு வெற்றி மட்டுமே முக்கியம். இலக்கை விரட்டும்போது ஆட்டமிழக்காமல் களத்தை விட்டு வெளியேற வேண்டும் என எண்ணுவேன்.
இலக்கு 370, 380 ஆக இருந்தாலும் என்னால் முடியாது என எண்ணமாட்டேன். ஹோபார்டில் இலங்கைக்கு எதிராக 40 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்தால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்கிற நிலைமை இருந்தது. சுரேஷ் ரெய்னாவிடம் சொன்னேன், இதை இரு டி20 ஆட்டங்களாக வகுத்து இலக்கை நிர்ணயித்துக்கொள்வோம் என. அதனால் தான் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றோம் என்றார்.