ஜூன் 8-ம் தேதி இங்கிலாந்துக்குச் செல்லவுள்ள வீரர்கள்: டெஸ்ட் தொடருக்காகத் தயாராகும் மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் கடைசிக்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஜூன் 8-ம் தேதி இங்கிலாந்துக்குச் செல்லவுள்ள வீரர்கள்: டெஸ்ட் தொடருக்காகத் தயாராகும் மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் தொடருக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காகப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜூன் 4 அன்று தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

இந்த சீஸனில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் ரூ. 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார். எனினும், சில அறிவிப்புகளால் இங்கிலாந்து கிரிக்கெட் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த ஓர் அறிவிப்பில், ஜூன் 1 முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறினார். ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம். கரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும். தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

இதையடுத்து இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறியதாவது:

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் கடைசிக்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் தங்களுடைய திட்டங்களின் இறுதி வடிவத்தில் உள்ளார்கள். இதன்மூலம் இங்கிலாந்து அரசின் ஒத்துழைப்பை அவர்களால் கோரமுடியும்.

இம்மாத இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முறைப்படி எங்களுக்கு அழைப்பு விடுக்கும். இதன்மூலம் எங்களுடைய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெற்று, ஜூன் ஆரம்பத்தில் எங்களுடைய வீரர்கள் இங்கிலாந்துக்குச் செல்வார்கள். முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு நான்கு வாரங்களாவது எங்களுக்குத் தேவைப்படும். எனவே ஜூன் 8-ம் தேதி எங்களுடைய வீரர்கள் இங்கிலாந்துக்குப் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம் ஜூலை 8, ஜூலை 16, ஜூலை 24 ஆகிய தேதிகளில் டெஸ்ட் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com