இந்திய அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது தியாகி, இந்திய அணிக்காக 2009-2010 ஆகிய இரு ஆண்டுகளிலும் 4 ஒருநாள் ஆட்டங்களிலும் ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடியுள்ளார். 41 முதல்தர ஆட்டங்களில் 109 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2009, 2010 ஆண்டுகளில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற தியாகி, மொத்தமாக 14 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுதீப் தியாகி அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடியதில் பெருமை கொள்கிறேன். தோனியின் தலைமையின் கீழ் என்னுடைய முதல் ஒருநாள் ஆட்டத்தை விளையாடினேன். அவருக்கு என்னுடைய நன்றி. கயிப், ஆர்பி சிங், ரெய்னா ஆகியோர் எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்துள்ளார்கள் என்று தனது ஓய்வு அறிவிப்பு குறித்த அறிக்கையில் கூறியுள்ளார் சுதீப் தியாகி.