இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார்.
எல்பிஎல் (Lanka Premier League) எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது. பிறகு கரோனா தொடர்பான நிர்வாகக் காரணங்களால் போட்டியை ஒத்திவைத்தது.
இந்நிலையில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 வரை இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறவுள்ளது. 21 நாள்களில் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
கண்டி டஸ்கர்ஸ், டம்புல்லா ஹாக்ஸ், கேலே கிளாடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
கண்டி டஸ்கர்ஸ் அணியில் இர்பான் பதான் & முனவ் படேல், கொழும்பு கிங்ஸ் அணியில் மன்ப்ரீத் கோனி என மூன்று இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.
வீரர்கள் இரு பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். விமான நிலையத்தில் ஒரு சோதனையும் விடுதிக்குள் செல்லும்போது மற்றொரு சோதனையும் நடத்தப்படும். மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். பரிசோதனைகளின் முடிவுகள் வந்த பிறகு வீரர்கள் சுயமாகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆறாவது நாளன்று மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் கரோனா இல்லை என்று உறுதியான பிறகு ஏழாவது நாளிலிருந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என இலங்கை கிரிக்கெட் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறியுள்ளார்.
இந்நிலையில் எல்பிஎல் போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கெயில், சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற கெயில், பஞ்சாப் அணிக்காக ஏழு ஆட்டங்களில் விளையாடி 288 ரன்கள் எடுத்தார்.