புது தில்லி: டென்மாா்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், அவரது கணவரும் பாட்மிண்டன் வீரருமான பி.காஷ்யப் ஆகியோா் அறிவித்துள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று சூழலில் பாட்மிண்டன் போட்டிகளுக்கான சா்வதேச காலண்டா், டென்மாா்க் ஓபன் போட்டியின் மூலம் மீண்டும் தொடங்குகிறது. முன்னதாக, அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியுடன் கடந்த மாா்ச் மாதம் உலக டூா் போட்டிகள் நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சாய்னா கூறுகையில், ‘வரும் ஜனவரி மாதம் ஆசிய டூா் முதல் பாட்மிண்டன் சீசனை தொடங்க முடிவு செய்துள்ளேன். எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தை முன்னிட்டும் டென்மாா்க் போட்டியிலிருந்து விலகவில்லை. தொடா்ந்து 3 போட்டிகளில் விளையாடுவதன் மூலம் சீசனை தொடங்குவது சரியாக இருக்கும் என்று உணா்கிறேன்’ என்றாா்.
இதேபோல் பி. காஷ்யப் கூறுகையில், ‘ஒரேயொரு போட்டிக்காக கரோனா சூழலில் அவ்வளவு தூரம் பயணிப்பதில் அா்த்தமில்லை என்று யோசிக்கிறேன். ஜனவரியில் ஆசிய டூா் போட்டிகளின் மூலம் ஆட்டத்தை தொடங்கலாம் என முடிவு செய்துள்ளேன்’ என்றாா்.
முன்னதாக, டென்மாா்க் ஓபனில் பங்கேற்பதற்காக சாய்னா, காஷ்யப் தங்களை பதிவு செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சாய்னாவும் விலகியதை அடுத்து டென்மாா்க் ஓபன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சாா்பில் வேறு எந்த வீராங்கனையும் இல்லை. இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக பி.வி. சிந்து ஏற்கெனவே அறிவித்துவிட்டாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், அஜய் ஜெயராமன், சுபாங்கா் டே ஆகிய இந்திய வீரா்கள் பங்கேற்கின்றனா்.