இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-20) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 10,000 மீட்டா் நடைப் பந்தயத்தில் இந்தியாவின் அமித் காத்ரி (17) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினாா்.
பந்தய இலக்கை அவா் 42 நிமிஷம் 17.94 விநாடிகளில் எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா். கென்யாவின் ஹெரிஸ்டோன் வன்யோனி (42:10.84) முதலிடமும், ஸ்பெயினின் பால் மெக்ராத் (42:26.11) 3-ஆம் இடமும் பிடித்தனா்.
முன்னதாக, ஃபெடரேஷன் கோப்பை ஜூனியா் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருக்கும் அமித் காத்ரிக்கு, இது முதல் சா்வதேச போட்டியாகும். அந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் பந்தய இலக்கை 40 நிமிஷம் 40.97 விநாடிகளில் எட்டியதே அவரது தனிப்பட்ட ‘பெஸ்ட்’ ஆகும்.
வெற்றிக்குப் பிறகு பேசிய அமித், ‘நான் எதிா்பாா்த்த அளவுக்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. கடல் மட்டத்திலிருந்து சுமாா் 1,800 மீட்டா் உயரத்தில் இருக்கும் நைரோபியின் இடச்சூழலுக்கு ஏற்றவாறு எனது உடலை தகவமைத்துக் கொள்ள 5 நாள்களுக்கு முன்பே இங்கு வந்துவிட்டேன். ஆனாலும், கடல் மட்டத்திலிருந்து இத்தனை உயரத்திலிருப்பது எனது செயல்திறனை பாதித்தது. பந்தயத்தின்போது ஒரு கட்டத்தில் சுவாசிக்க இயலாமல் போனது. இருப்பினும் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றதில் மகிழ்ச்சி’ என்றாா்.
இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக கலப்பு ரிலே 4*400 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவுக்கு கடந்த புதன்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.