சாய்னா நெவால் இன்னொரு ஒலிம்பிக்ஸில் விளையாடுவாரா?: பயிற்சியாளர் பதில்

ஜனவரி 2019-க்குப் பிறகு அவருடைய ஆட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாய்னா நெவால் இன்னொரு ஒலிம்பிக்ஸில் விளையாடுவாரா?: பயிற்சியாளர் பதில்

இன்னொரு ஒலிம்பிக்ஸில் சாய்னா நெவால் விளையாடுவது கடினம் என பயிற்சியாளர் விமல் குமார் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று பாட்மிண்டன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தேர்வாகவில்லை. 30 வயது சாய்னா நெவால் 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 11 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளார்.

மற்றொரு ஒலிம்பிக்ஸ் போட்டியில் சாய்னா நெவால் விளையாடுவது குறித்து பயிற்சியாளர் விமல் குமார் கூறியதாவது:

2005-06-ல் கவனம் பெற்ற சாய்னா நெவால், தொடர்ச்சியாக நன்கு விளையாடி வந்துள்ளார். இந்த வருடம் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தேர்வாகாதது வேதனையானது. கடந்த இரு ஆட்டங்களிலும் அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அவர் மேலும் சில வருடங்கள் விளையாடலாம்.

இன்னொரு ஒலிம்பிக்ஸில் அவரால் பங்கேற்பது கடினம். தொடர்ச்சியாக அவர் காயமடைந்து வருகிறார். எனவே இது மிகவும் கடினமானது. ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பது சாய்னாவின் முதன்மை விருப்பமாக இருக்கக்கூடாது. ஜனவரி 2019-க்குப் பிறகு அவருடைய ஆட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா கோப்பையை வென்றபிறகு பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. கரோனாவால் விளையாட முடியாமலும் போய்விட்டது. சாய்னா தன்னுடைய உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். காஷ்யப் அவருடைய பயிற்சியாளராக உள்ளார். அடுத்த சில வருடங்களுக்கு சாய்னா விளையாடினால் அது மற்ற இந்திய அணி வீராங்கனைகளுக்கும் நல்லதாக அமையும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com