ஆஸ்திரேலியாவுடனான 3-வது டி20 ஆட்டத்திலும் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
பெத் மூனி மற்றும் தஹிலா மெக்ராதின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. மூனி 43 பந்துகளில் 61 ரன்களும், மெக்ராத் 31 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.
150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தானா மற்றும் ஷெபாலி வெர்மா களமிறங்கினர். ஷெபாலி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மட்டும் நம்பிக்கையுடன் அரைசதம் அடித்து 52 ரன்கள் சேர்த்தார்.
மற்றவர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20 ஓவர்களில் இந்திய அணியால் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கெனவே ஒருநாள் தொடரையும் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.