கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் இன்று தொடங்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் இன்று தொடங்குவதாக இருந்த 5-வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் இன்று விளையாட சில இந்திய வீரர்கள் தயக்கம் காட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் மான்செஸ்டர் டெஸ்ட் தொடங்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. இந்திய வீரர்கள் அனைவருக்கும் மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று மாலை தெரிய வரும். புதிய பரிசோதனை முடிவுகளை அறிந்துகொண்ட பிறகு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.