கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுமா?

மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுமா?

மும்பையில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள சூழலில் வான்கடே மைதான ஊழியர்களில் 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

ஏப்ரல் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன. மும்பையில் 10 ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிக பாதிப்பு பதிவாகி வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 47,827 போ் புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். கரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து, மிக அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு இதுவாகும். மாநில தலைநகரான மும்பையில் ஒரே நாளில் 8,832 போ் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதல்வா் உத்தவ் தாக்கரே காணொலி வழியில் மாநில மக்களிடையே வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு மாற்றான நடவடிக்கை எடுப்பது குறித்து நிபுணா்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஓரிரு நாள்களில் கடும் கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்றார்.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இதனால் மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் மும்பையில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த முடியும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒருவேளை, மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ஹைதராபாத், இந்தூர் ஆகிய இரு நகரங்களும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த தயாராக உள்ளதாகவும் அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com